Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பதி: தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் தாச சாகித்ய திட்டம் சார்பில் 3 நாள் படி திருவிழா தொடங்கி நடந்து வந்தது. முதல் 2 நாட்கள் திருப்பதி ரெயில் நிலையம் பின் பக்கம் உள்ள கோவிந்தராஜசாமி 3-வது சத்திரம் வளாகத்தில் பஜனை மண்டல யாத்திரை தொடக்க நிகழ்ச்சி, சுப்ர பாதம், தியானம் மற்றும் பஜனை, சங்கீர்த்தனம், உபன்யாசம் நடந்தது. அதில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பஜனை மண்டல உறுப்பினர்கள் கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் நிலையம் பின்பக்கமுள்ள 3-வது சத்திர வளாகத்தை அடைந்தனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வழிநெடுகிலும் பஜனை பாடல் களை பாடினர். கோலாட்டங்கள் ஆடினர்.
3-வது நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருப்பதியில் இருந்து பஜனை மண்டல உறுப்பினர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அலிபிரி பாத மண்டபத்தை அடைந்தனர். அங்கு தாச சாகித்திய திட்ட சிறப்பு அதிகாரி பி.ஆர்.ஆனந்ததீர்த்தாச்சாரியுலு தலைமையில் அர்ச்சகர்கள் படிகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்தனர். அதன் பிறகு திருமலையை நோக்கி பாத யாத்திரையை தொடங்கினர். திருமலையை அடைந்த பஜனை மண்டல உறுப்பினர்கள் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.